Wednesday, 5 August 2020

கலித்தொகையில் சிவபெருமானின் தோற்றப் பொலிவு



          கலித்தொகையில்  சிவபெருமானின்  தோற்றப் பொலிவு

                                                   
         சங்க நூல்களுள் காலத்தால் பிற்பட்டதாகக் கருதப்படும் கலித்தொகையிலும் பரிபாடலிலும் மிகுதியான அளவு புராண, இதிகாசக் கூறுகள் காணப்படுகின்றன.இவற்றுள் கலித்தொகை அகத்தைப் பற்றி 150 செய்யுட்களைக் கொண்டமைந்த இலக்கியமாகும். ஐந்திணைப் பகுப்புகளைக் கொண்டமைந்த கலித்தொகையில் சிவபெருமான், திருமால், பீமன், பலராமன், முருகன், கொற்றவை, காமன், சாமன் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. சிவபெருமானின் தோற்றப் பொலிவு குறித்த புராணக்கதைகள் உவமைகள் வாயிலாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். மூன்று  பகுதிகளைக்  கொண்டமைந்தது  இக்கட்டுரை.
1.  சிவபெருமான்  என்ற  கருத்துரு.
2.  கலித்தொகையில்  சிவபெருமானின்  தோற்றப் பொலிவு.
3.  நிறைவுரை.
         சிவபெருமானின்  தோற்றப்  பொலிவு  பற்றிக்  காண்பதற்கு  முன்னால், சிவபெருமான்  என்ற  கருத்துரு  தோன்றுவதற்குக்  காரணமானவற்றை  இவண்  சுட்டிச் செல்லுதல்  இக்கட்டுரைக்கு  வலுசேர்க்கும்  என்று  எண்ணுகின்றேன்.
         காலத்தால் முற்பட்டதாகக் கூறப்படும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் சிவபெருமானைப் பற்றி வெளிப்படையாக எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. ஆனால்,சிலர் தொல்காப்பியம் கூறும் கந்தழி என்பதைச் சிவபெருமானோடு தொடர்புபடுத்திக் கூறுவர். ஆனால், உரையாசிரியர் (இளம்பூரணர்),நச்சினார்க்கினியர் இது பற்றி  விரிவாக  எதுவும் கூறவில்லை. கந்தழி என்ற  சொல்லிற்கு நச்சினார்கினியர், ஒரு பற்றுக்கோடுமின்றி அருவாகித்  தானே  நிற்கும்  தத்துவம் கடந்த  பொருள் என்று  விளக்கம்  தருகின்றார். அதாவது  அவர்  கந்தழி  என்பதைப்  பரம்பொருள் என்றும்  பற்றுக்கோடு  இல்லாதது (உருவம் இல்லாதது)  என்றும் கூறுவதைக்  கவனிக்க வேண்டும். பிற்காலத்தில்  எழுதப்பட்ட திருவாசகத்தில்  மாணிக்கவாசகர்  பற்றலாவதோர்  நிலையிலாப் பொருள் (திருவாசகம்-அதிசயப்பத்து,9) என்று  சிவபெருமானைக்  குறிப்பிடுகின்றார்.இதனை அடியொற்றியே நச்சினார்கினியரின்  விளக்கமும்  காணப்படுகின்றது.
      கந்து  என்ற  சொல்  பற்றி  ந.சுப்பிரமண்யன்  சங்க  கால  வாழ்வியல்  என்ற  நூலில் கூறுகையில்,(ப.465) நடப்பட்ட ஒரு மரக்கட்டை 'கந்து' எனப்பட்டு வழிபடப்பெற்றது.அக்கட்டையில்  தெய்வம்  இருப்பதாக  நம்பப்பட்டமையின்  அது  கடவுளாகவே  கருதப்பட்டது  என்கின்றார்.
      கந்து வழிபாட்டை  ரிக்  வேத  கால வைதீகர்கள்  வெறுத்துள்ளனர். இது  பற்றி  வே.தி.செல்லம், இருக்கு வேத காலத்து  வைதீகர்கள்  கந்து  வழிபாட்டை  வெறுத்தனர் (ப.138) என்று  தமிழக  வரலாறும்  பண்பாடும் என்ற  நூலில்  குறிப்பிட்டுள்ளார்.ஆக,  கந்து  என்பது  தமிழர்களுக்கே  உரிய  பரம்பொருளாகும்.
         சில  ஆய்வாளர் கந்தழி என்பதைக் கல் தூண் எனப் பொருள் கொண்டு சிவலிங்கம் என்றனர். ஏனெனில், மொகஞ்சதாரோவிலும் சிவாலிக்  மலையிலும்  சிவலிங்கங்கள்  கிடைத்துள்ளன. ஆகவே  அவர்கள்  இந்த  முடிவுக்கு  வந்திருக்க வேண்டும்.
        ரிக், யசூர்  ஆகிய  வேதங்களில் கூறப்படும்  ருத்திரன்  என்ற  தெய்வத்தைச் சிவபெருமானோடு  தொடர்புபடுத்திச்  சிலர் கூறுவர். ஏனெனில், ருத்திரனின்  தோற்றம்  (வடிவம்) பற்றி  யசூர் வேதம் குறிப்பிடுகையில் கோபமே வடிவானவர் என்றும் எருதின் மேல் இருப்பவர் (பப்லுசாய)என்றும் உமையோடு கூடியிருப்பவர் (ஸோம)என்றும் மிருகத்தோலை அணிந்திருப்பவர் என்றும் முக்கண்களை  உடையவர் (த்ரயம்பகன்)என்றும் நீலகண்டர் என்றும் சதி கண்டர் என்றும் சடையர் என்றும் கூறுகின்றது. இந்த  இயல்புகள்  அல்லது  தோற்றங்கள்  அனைத்தும்  சங்க  காலச் சிவபெருமானுக்கும்  பொருந்துவனவாக  உள்ளன. எனவே, அவ்வாறு  அவர்கள்  கூறியிருக்கலாம். எவ்வாறாயினும்  சிவபெருமான் எனும் கருத்துரு  தோன்றுவதற்கு வேதங்களின்  பங்கு குறிப்பிடத்தக்க  ஒன்றாகும்.
       இனி, சங்க  நூல்களுள்  சிவபெருமான்  பற்றிய  குறிப்புகள்  காணப்படினும்  எங்கேயுமே  சிவன்,சிவபெருமான் என்ற  சொற்கள்  கூறப்படவில்லை. சிவபெருமான்   என்றால்  இப்படித்தான்  இருப்பார்  என்று  அடையாளம்  காணும்  தொடர்கள்  மட்டுமே  காணப்படுகின்றன. சங்கத் தொகை  நூல்களின் (அகம்,புறம்,ஐங்குறு,பதிற்று,கலித்) கடவுள்  வாழ்த்து  சிவபெருமானைப்  பற்றி  இருந்தாலும்  அங்குக்  கூட  சிவன், சிவபெருமான்  என்ற  சொற்கள்  காணப்படவில்லை.இக்கடவுள்  வாழ்த்துப்  பாடல்கள்  பிற்காலத்தைச்  சேர்ந்தவையாக  ஆய்வாளர்களால்  கண்டறியப்பட்டுள்ளன.
       சிவபெருமான்  தமிழர்களின்  நிலக்கடவுள்  என்பதை  வே.தி.செல்லம் (ப.136) பின்வருமாறு  கூறுகின்றார். ......................தமிழர்களின்  முக்கியமான  கடவுள்  என்ற  பொருளில்  மக்களின்  குடியிருப்புக்கள்  அதிகமாகக்  கொண்ட  மருத  நிலத்தில்  தொல்காப்பியர்  சிவ  வழிபாட்டைக்  கண்டார்.கடவுளர்களுள்  தலையாய  கடவுள்  என்ற  பொருளில்  தொல்காப்பியர்  சிவனை  வேந்தன்  என்றார்.சிவன்  தமிழர்களின்  நிலக்கடவுளாக்கப்பட்டுப்  பிறை  அணிவிக்கப்பட்டான்  என்கின்றார்.இவர்  தொல்காப்பியர்  கூறும்  வேந்தன்  மேய  தீம்புன லுலகமும் (தொல்.பொருள்.அகத்.5:3)என்ற  நூற்பாவில்  உள்ள  வேந்தன்  என்ற  சொல்லிற்கு சிவன் என்று  பொருள்  கூறுகின்றார்  போலும்.வேந்தன்  என்ற  சொல்லிற்கு ச.வே.சு.,தமிழண்ணல்  போன்ற  அறிஞர்கள்  இந்திரன்  என்று  பொருள்  உரைக்கின்றனர்.
        வே.தி.செல்லம்  அவ்வாறு  கூறுவதற்குக்  காரணம்  பிற்காலத்தில்  சிவபெருமானைக்  கூறுவனவாகக்  கொன்றை  வேந்தன், வேகம்  கொடுத்தாண்ட  வேந்தனடி  வெல்க (திருவாசகம்,சிவபுராணம்,6) போன்ற  அடிகள்  வழக்கில்  அமைந்துள்ளன. எனவே,  அவர்  அந்த  முடிவிற்கு  வந்திருக்கக்கூடும். சங்க  காலத்தில்  மூவகைச்  சமய  மரபுகள்  இருந்தன  என்று  ந.சுப்ரமண்யன்  தமது  சங்க கால  வாழ்வியல் (ப.464) என்ற  நூலில்  கூறியுள்ளார்.
1.   தமிழரது  சுதேசிக்  கடவுளரும்  வழிபாட்டு  முறையும்.
2.   வேற்றிடங்களில்  இருந்து  வந்த  கடவுட் கொள்கைகள் - வழிபாட்டு முறைகள்.
3.   வேற்றிடமிருந்து  புகுந்த  இந்து  சமயத்தியற்குப்  புறம்பான  சமயக் கருத்துக்கள் - மரபுகள். என்று  கூறியுள்ளார்.
         இனி, இந்தப்  பின்னணியில்  கலித்தொகையில்  இடம்பெறும்  சிவபெருமானின்  தோற்றப் பொலிவினைக்  காண்பது  சிறப்புடையதாகும்.
         கலித்தொகையின்  முதற்  செய்யுள்  சிவபெருமானைப்  பற்றிய  கடவுள்  வாழ்த்து ஆகும். இச்செய்யுள் சிவபெருமானின் தோற்றத்தையும் இயல்பையும் எடுத்தியம்புகின்றது. சிவபெருமான்  நிருத்தம், வியாகரணம், கற்பம், கணிதம், பிரமம், சந்தம் எனும் ஆறினை உணர்ந்த அந்தணர்களுக்கு அருமறைகளைப் பகர்தல், திரிபுரம் (மூ எயில்) எரித்தல், ஆகிய செயல்கள் கூறப்பட்டுள்ளன. மேலும், சிவபெருமான் ஆடிய கூத்துக்களாகக் கொடு கொட்டியாடுதல், பண்டரங்கமாடுதல், கையில் காபாலம் கொண்டாடுதல் ஆகிய மூன்று  கூத்துக்கள் நல்லந்துவனரால் (கலித்.1)கூறப்பட்டுள்ளன. இம்மூன்று  கூத்துக்கள்  எதற்காக  ஆடப்பட்டன  என்பதற்கும்  புராணக்கதைகள்  உண்டு. கொடுகொட்டி என்பது சிவபெருமான் எல்லாவற்றையும் அழித்து ஆடும் கூத்தாகும். பண்டரங்கம் என்பது முப்புரங்களை எரித்து சிவபெருமான் ஆடிய கூத்தாகும். பிரம்மனின் தலையைக் கையில்  கொண்டு சிவபெருமான் ஆடிய கூத்து காபாலம் என்பது. இவற்றைக் கலித்தொகை வாயிலாக அறியலாம்.
                படுபறை பலஇயம்ப பல்உருவம் பெயர்த்து நீ
                   கொடு கொட்டி ஆடுங்கால் (கலித்.1:5,6)
              மண்டமர் பலகடந்து  மதுகையால் நீறணிந்து
                   பண்டரங்கம் ஆடுங்கால் (கலித்.1:8,9)
                   கொலை  உழுவைத் தோல் அசைஇ கொன்றைத்தார்  சுவற்புரள
                   தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால் (கலித்.1:11,12)
        சிலம்பில்  மாதவி  ஆடிய  பதினொரு  வகை  ஆடல்களுள்  பண்டரங்கம்,கொடு கொட்டி எனுமிரு  ஆடல்களும்  அடங்கும்.
        சிவபெருமானின் தோற்றப் பொலிவு பற்றி நல்லந்துவனார் கூறுகையில், தேறு நீர் சடைக்கரந்து (2) மணிமிடற்று (4), மதுகையால் நீறணிந்து (8), கொலை உழுவைத் தோல் அசைஇ (11), கொன்றைத்தார் சுவற்புரள (11), என்று கூறுகின்றார்.
      இவை தவிர, கலித்தொகையில் சிவபெருமானின்  தோற்றப்  பொலிவினைக்கூறும்  பாடல்களாக 2,26 (பாலை), 38 (குறிஞ்சி), 81,83,100 (மருதம்), 101,103104,105 (முல்லை), 133,150 (நெய்;தல்) ஆகிய  பாடல்கள்  உள்ளன.
      பாலைக்கலியில் முக்கண்ணான், கணிச்சியோன், ஆனேற்றுக் கொடியோன் என்று சிவபெருமானின்  தோற்றம்  பெருங்கடுங்கோவால்  கூறப்பட்டுள்ளது. முக்கண்ணான்  என்ற  சொல்  கலித்தொகையில்  மட்டும்  இரண்டு  இடங்களில் (2,104) பயின்று  வந்துள்ளதைக்  காண்கின்றோம். இதைப்  போலவே, கணிச்சியோன்  என்ற  சொல்  கலித்தொகையில்  மட்டுமே  பயின்று  வந்துள்ளது. குறிப்பாகக்  கலித்தொகை  2,103,105  ஆகிய  மூன்று  பாடல்களில்  பயின்று  வரக் காண்கிறோம். பாலை நிலத்தின் வெம்மையைக் கூற பெருங்கடுங்கோ சிவபெருமான் திரிபுரம் எரித்த புராணத்தை உவமை வாயிலாகக் கூறுகின்றார்.
       பாலை நிலமானது திரிபுரம் எரிக்க எழுந்த சிவபெருமானின் சினந்த முகத்தை ஒத்துள்ளது என்கின்றார் புலவர். இவ்வுவமை  பாலை  நிலத்தின்  கொடுமையைக்  கூறப் பயன்படுத்தப்  பட்டுள்ளது.
                தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக
              அடங்காதார் மிடல்சாய அமரர் வந்து இரத்தலின்
              மடங்கல் போல் சினைஇ மாயம்செய் அவுணரைக்
              கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூஎயிலும்
              உடன்றக்கால் முகம் போல ஒண்கதிர் தெறுதலின்
              சீறருங் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில்
              ஏறு பெற்று உதிர்வன போல் வரைபிளந்து (கலித்.2:1-7)
        இக்காட்சி  சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாறு என்ற  பெயரில்  சிவபுராணத்திலும் வருகின்றது.
       தாரகாசுரனின் புதல்வர்களாகிய வித்யுன்மாலி, காரகாஷன், கமலாஷன் ஆகியோர் தன் தந்தை இறப்பிற்குக் காரணமான தேவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்து பிரம்மனை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டனர். அவர்களின் தவத்தை ஏற்று பிரம்மன் அவர்கள் முன் தோன்றினார். பின்பு அவர்கள் மூவரும் பிரம்மனை வணங்கி  மூன்று நகரங்களை வரமாகக் கேட்டனர்.மேலும் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஒன்று சேர வேண்டும் என்றும் அச்சமயத்திலேயே தங்களுக்கு கால வரையில்லாத புருஷன் ஒருவனால்தான் தங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டனர். பொன், வெள்ளி, இரும்பு என்னும் திரிபுரங்கள் ஓரிடத்தும் நிலையாக நில்லாமல் மக்கள், விலங்குகள் வாழும் நகரங்கள், காடுகள் மீது திடீர் திடீரென இறங்கியதால் அதன் அடியில் சிக்கி மக்களும் விலங்குகளும் மடிந்தன.
       இதைத் தடுத்து நிறுத்த தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். அவர்கள் மூவரும் சிவபக்தி உடையவர்களாக இருப்பதால் சிவபெருமான் அவர்களை அழிக்கவில்லை என்று உணர்ந்த தேவர்கள் அவர்களை அதர்ம வழியில் செலுத்த நாரதரை கேட்டுக்கொண்டனர். நாரதர் அதை செய்து முடித்தார். தேவர்களின் வேண்டுதலை ஏற்று தனக்கு ஒரு தேரை ஏற்பாடு செய்துதருமாறு தேவர்களை ஏவினார். உடனே விஷ்வ கர்மா ஒளி பொருந்திய தேர் ஒன்றைச் செய்தார். பொன்னால் வேயப்பட்ட அந்தத் தேருக்கு வலப்பக்கத்திற்குச் சூரியனும் இடப்பக்கத்திற்குச் சந்திரனும் சக்கரங்களாயின. பருவங்கள் ஆறும் தேருக்கு விதானங்கள் ஆயின. ஆகாயம் கொடுமுடியாகவும் உதயகிரியும் அஸ்தமனகிரியும் தேர் மண்டபத்தின் முன்புறமும் பின்புறமும் ஆயின. யாகம் முதலான கர்மாக்கள் தேரில் உட்காரும் பீடமாயின. புராணங்கள், சாஸ்திரங்கள் கொடிகளாயின. கடல்கள் ஏழும் திரைச்சீலைகளாயின.வேதங்கள் நான்கும் தேரை இழுத்துச் செல்லும் குதிரைகளாயின. மேரு மலை வில்லாயிற்று. வாசுகி அதற்கு நாணாயிற்று. பிரம்மா தேரை ஓட்டும் சாரதியானார். இவ்வாறாகச் சென்று சிவபெருமான் முப்புரங்களை அழித்தார் என்று சிவபுராணம் கூறும்.
       பிரிந்தார்க்குத் துன்பத்தையும் கூடியிருந்தார்க்கு இன்பத்தையும் தரும் இளவேனிற்காலம் வந்தது என்பதைக் கூறுவதற்குப் பெருங்கடுங்கோ சிவபெருமானின் இடபக் கொடியைக் கூறுகின்றார்.
               ஆனேற்றுக் கொடியோன் போல் எதிரிய இலவமும் (கலித்.26:5)
      ஆனேற்றின்; கொடியை உடைய சிவபெருமானைப் போல் இலவ மலர்கள் மலர்ந்தன என்கின்றார் புலவர். ஆனேற்றுக் கொடியோன்  என்று  சிவபெருமான்  புகழப்படுகின்றார்.
       குறிஞ்சிக்கலியில் இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (கலித்.38:1) என்று சிவபெருமானின் தேற்றத்தைக் கூறுகின்றார் கபிலர். இந்த  ஒரேயடியில்  ரத்தினச்சுருக்கமாக  இரு  புராணக் கதைகளையும்  உள்ளடக்கி  விடுகின்றார்  புலவர். திரிபுரத்தை எரிக்க சிவபெருமான்  இமய மலையை வில்லாக வளைத்தல்  என்ற   புராணமும்  பகிரதனின் தவத்தின் காரணமாகப்  புவிக்கு  விரைந்தோடி  வந்த   கங்கையைத்  தலையில்  தாங்குதல்  என்ற  புராணமும்  சொற்செட்டாக  ஒரே  அடியில்  கூறப்பட்டுள்ளது  கபிலரின்  சொல்லாட்சித்  திறத்தைக்  காட்டுகின்றது. மேலும்,  இதே  பாடலில்  கபிலர்  உவமை  மூலம்  இராவணனின்  செருக்கை  அழித்த  சிவபெருமானைப்  பற்றிக்  கூறுகின்றார்.    
        புலியின் வடிவை ஒத்த வேங்கை மலர்கள் மிகுதியாக மலர்ந்த மரத்தை புலி என்று தவறாகக்  கருதிய யானை அம்மரத்தைத் தன் கொம்பால் குத்தியது. அக்கொம்பை மீண்டும் எடுக்க மாட்டாது துன்பம் எய்தி மலைகள் அதிரும் படியாக பிளிறியது. இதற்கு உவமையாக கபிலர் இராவணன் இமய மலையைத் தூக்கித் துன்பம் அடைந்ததைக் காட்டுகின்றார். இதனை,
                உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
               ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
               தொடிப்பொலி தடக்கையின் கீழ் புகுந்து அம்மலை
               எடுக்கல் செல்லாது உழப்பவன் போல
               உறுபுலி உரு  ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
               கறுவு கொண்டு அதன்முதல் குத்திய மதயானை
               நீடு இருவிடர் அகம் சிலம்பக் கூய்
              கோடு புய்க்கல்லாது உழக்கும் நாட (கலித்.38:2-9) என்ற அடிகள் மூலம் அறியலாம். இவ்வடிகளில்  உள்ள  உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக  என்ற  அடி  குறிப்பிடத்தக்கது. ஏனெனில்,  உமையோடு  சேர்ந்து  சிவபெருமான்  அமர்ந்துள்ளார்  என்று  கூறப்பட்டுள்ளது. உமா மகேஸ்வரராகச்  சிவபெருமான்  காட்சித்  தருவதை  இவ்வடியின்  மூலம்  உணர்ந்து  கொள்ள  முடிகின்றது.
          இதனைப் பற்றி சுயுனுர்யுஏயுடுடுயுடீர்  வுசுஐPயுவுர்ஐ   கூறும் செய்தியை இவண் காணலாம்.
         யுn  யசசழபயவெ  சுயஎயயெ  சயளைநன  வாந  மயடையளய   அழரவெயin  வழ  உhயடடநபெ  hiஅ. வுhந  அழரவெயin  ளவயசவநன  ளாயமiபெ  யனெ  வாந  வநசசகைநைன  ரஅயஇ ளiஎய'ள  உழளெழசவ  hரபபநன  hiஅ ழரவ  ழக  கநயச. வுhளை  pடநயளன  ளiஎய. டீரவ  றாநn  வாந  அழரவெயin   றயள  யஉவரயடடல  சயளைநன  டில  வாந  னநகயைவெ  சுயஎயயெ  யடிழஎந  வாந  பசழரனெ  யனெ  வைள  ளாயமiபௌ  டிநஉயஅந  சயவாநச  inஉழnஎநnநைவெ. ளுiஎய  தரளவ  pசநளளநன  வை  றiவா  hளை  வாரஅடி  யனெ  சுயஎயயெ  றயள உசரளாநன  ரனெநச  வைள  pசநளளரசந. டீரவ  வாநn  ளiஎய  றயள  pடநயளநன  றiவா  hளை  ளாசநைமள  யனெ  டிநஉயஅந  hளை  அநவெழச.(p.19).
                      மருதக்கலியில் ஆலமர் செல்வன், அருந்தவ முதல்வன் என்று சிவபெருமானின் இயல்புகள் மருதனிள நாகனாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலித்தொகையில்  ஆலமர் செல்வன்  என்ற  சொல்  இருவிடங்களில்  (81,83) மட்டுமே  பயின்று  வந்துள்ளதைக் காண்கின்றோம். சிவபெருமானின்  மகன்  முருகன்  என்ற  கருத்து கலித்தொகையில்  பதிவாகியுள்ளது.
         தன் மகன் தேரைக் கையில் கொண்டு உருட்டியவாறு நடை பயின்று வரும் தன்மையை உணர்ந்த தலைவி சிவபெருமானின் மகனாகிய முருகனைப் போல் வருகின்றான் என்று உவமை கூறுகின்றாள். இதனைப் புலவர்,
           பாலோடு  அலர்ந்த  முலை  மறந்து  முற்றத்துக்
          கால்வல்  தேர்கையின்  இயக்கி  நடை பயிற்றா
          ஆலமர் செல்வன்  அணிசால்  பெருவிறல்
          போல வரும் என் உயிர் (கலித்.81:7-10) என்ற  அடிகள்  மூலம்  பதிவு செய்கின்றார்.இவ்வடிகளில்  ஆலமர்  செல்வனின்  மகன்  யார்? என்று  கூறப்படவில்லை. ஆனால்,  உரையாசிரியர்கள்  முருகன்  என்று  உரையெழுதியுள்ளனர்.
      பனங் குரும்பையைக் கழி நுனியில் பொருத்தித் தேர் செய்து சிறுவர்கள் கயிற்றிலே கட்டி இழுத்து வந்தனர். இதைக்கண்டு ஆலமர்  செல்வனின்  மகன்  முருகப்பெருமானின் விழாத் தொடங்கிற்று என்று  எண்ணினர்  இளமகளிர்  என்பதை,
          .........  ........... ......... உயர்சீர்த்தி
         ஆலமர் செல்வன் அணிசால் மகன்விழாக்
          கால்கோள் என்று ஊக்கி (கலித்.83:13-15) இவ்வடிகளின்  மூலம்  உணர்கின்றோம்.
      தலைவியின் துன்ப மிகுதியைக் கண்ட சான்றோர் தலைவனிடம்  சென்று  தலைவியின் நிலைப்பாட்டைக் கூறுகின்றனர்  சான்றோர்.
                ஐயம் தீர்ந்து  யார்  கண்ணும் அருந்தவ முதல்வன் போல
               பொய் கூறாய் என நின்னைப் புகழ்வது  கெடாதோதான் (கலித்.100:7,8)
                ஆலமர் செல்வன், அருந்தவ முதல்வன்  என்று  மருதனிள  நாகனார் கூறுவது  சிவபெருமானின் தொன் திசைக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தியையே ஆகும். இவர் தென் திசையில் ஆலமரத்தடியில் அமர்ந்து சனகர், சனாதனார், சதாநந்தர், சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கும்  வேதங்களின்  உண்மைப் பொருளை உணர்த்தினார் என்று  சிவபுராணம் கூறும். இதனைச்  சிந்துவெளியில் கிடைத்த இரு முத்திரைகளோடும் (பசுபதி,மகாயோகி) பொருத்திப் பார்க்கலாம்.
         சிந்துவெளியில் மகாயோகி, பசுபதி என்ற இரு உருவங்கள் பொறித்த முத்திரைகள் கிடைத்துள்ளன. இவ்விரண்டிலும் மூன்று முகம் கொண்ட ஓர் ஆண் உருவம் இரு கால்களை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக்கொண்டு யோக நிலையில் அமர்ந்துள்ளது போல் கிடைத்துள்ளன. மேலும்  மகாயோகியின் தலை மீது கொம்புடன் கூடிய கிரீடம் காணப்படுகின்றது. இதை மரத்தைக் குறிக்கும் அடையாளமாகவும் கருதலாம். இவ்வாறு கொள்வோமாயின்  இவ்வுருவத்தை ஆலமர் செல்வத்தின் உருவமாகக் கருத இடமுண்டு. மேலும், பசுபதி என்ற உருவத்தைச் சுற்றி  நான்கு மிருகங்கள் காணப்படுகின்றன. இவற்றைப் பிற்காலத்தில் ஆலமர் செல்வனைச் சுற்றி அமர்ந்துள்ள நான்கு முனிவர்களாகவும் கருத இடமுண்டு.
         முல்லைக்கலியில் கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்தவன், குழவித்திங்களைச் சூடியவன்,தாழ் சடையோன் என்று  சிவபெருமானைச் சோழன் நல்லுருத்திரனார் பாடுகின்றார்.
         இக்கலியில்  எருதுகளுக்கு   உவமையாகச்  சிவபெருமானின்  தோற்றம்  கூறப்படுகின்றது. 
          காரி எனும் எருது பொதுவனைக் குத்தி  அப்பொதுவன்  குடல் சரிய நின்ற  தோற்றத்திற்கு  உவமையாகச் சிவபெருமான்  கூற்றுவனின்  நெஞ்சைப் பிளந்த  தன்மையைக்  கூறுகின்றார் புலவர்.
              படர் அணி அந்தி  பசுங்கண்  கடவுள்
              இடறிய ஏற்றெருமை  நெஞ்சிடந் திட்டு
              குடர் கூளிக்கு  ஆர்த்துவான் போன்ம்  (கலித்.101:24-26) என்றும்
                ஏற்றெருமை  நெஞ்சம் வடிம்பின்  இடந்திட்டு
              சீற்றமோடு  ஆருயிர்  கொண்ட  ஞான்று  இன்னன் கொல்
              கூற்றென  உட்கிற்றென்  நெஞ்சு  (கலித்.103:43,45) என்றும்  கூறுகின்றார்.
     சிவபெருமான்  கூற்றுவனின்  நெஞ்சைப் பிளந்த செய்தியைச் சிவபுராணம் கூறுகின்றது. ஆனால் சிறிது மாற்றி கூறப்பட்டுள்ளது.
            தர்ம நெறி வழுவாமல் சிவ பக்தியிலேயே தன் காலத்தைக் கழித்தவன் சுவேதன். தர்ம சீலனாகிய அவனுக்கு வாழ்நாள் முடிவடையும்  காலம்  நெருங்கி விட அவன்  சிவபெருமான்  மீது முன்னிலும்  அதித  பக்தி  உடையவனாக  மாறினான். அச்சமயம்  அவனைக்  கொண்டு  செல்ல கூற்றுவன்  வந்தான். கூற்றுவன்  தன்  பாசக் கயிற்றைச் சுவேதன்  மீது  வீசினான். தன் வாழ்நாளின் இறுதி  லிங்கத்தின்  காலடியில்தான்  மடிய  வேண்டும்  என்று  எண்ணி  தன்  முன் இருந்த  லிங்கத்தின்  மீது  விழுந்து  அதை  அணைத்துக் கொண்டான். பக்தனின்  துன்பத்தைக் கண்டு  சிவபெருமான்  காலனைக்  கடுங்கோபத்துடன்  பார்த்தார். அவர் கோபப் பார்வையைத்  தாங்க  முடியாமல்  காலன்  தனது  எருமை  வாகனத்திலிருந்து  கீழே  விழுந்து  மடிந்து  போனான் என்று  கூறுகின்றது.
        ஏறுகளுக்கு  உவமையாக  நல்லுருத்திரனார்  சிவபெருமானைக்  கூறுகின்றார்.
                கொலைவன்  சூடிய  குழவித் திங்கள்  போல்
               வளையுபு  மலிந்த  கோடு அணி சேயும் (கலித்.103:15,16) என்றும்
                எரிதிகழ்  கண்ச்சியோன்  சூடிய  பிறைக்கண்
               உருவ  மாலை  போல
               குருதிக் கோட்டொடு  குடர்  வலத்தன (கலித்.103:25-27) என்றும் முல்லைக்கலி  கூறுகின்றது.
          குரால் எனும்  எருதிற்கு உவமையாகச்  சிவபெருமானின்  தோற்றத்தைக்  கூறுகின்றார்  புலவர். இதனை,
                மிக்கொளிர்  தாழ்சடை  மேவரும்  பிறைநுதல்
               முக்கணான்  உருவே  போல்  முரண் மிகு  குராலும்  (கலித்.104:11,12) என்றும்
               பெரும்பெயர்க்  கணிச்சியோன்  மணிமிடற்றணி  போல
               இரும்பிணர்  எருத்தின் ஏந்துஇமிழ்  குராலும் (கலித்.105:13,14) என்றும் சிவபெருமானின்  தோற்றம்  காளைகளின்  மீது  ஏற்றிக்  கூறப்படுகின்றது. கலித்தொகையில்  கணிச்சியோன்  என்ற  சொல்  சிவபெருமானை  அடையாளப்  படுத்தும்  சொல்லாக  2,103,105 ஆகிய  மூன்று  பாடல்களிலும்  வருவதைக்  காண்கின்றோம்.
         குழவித் திங்களை அணிந்தவன் என்றும் பிறையை அணிந்தவன்  என்றும்  சிவபெருமானின்  தோற்றப் பொலிவு புலவரால்  வருணிக்கப்பட்டுள்ளது. இதற்கான புராணக்கதையைக்  காண்போம்.
       பிரம்மனின்  மகனாகிய  தட்சனுக்கு  அசுவினி  முதலா  ரேவதி  ஈறா  27  புதல்விகள். இவர்கள்  அனைவரும்  சந்திரனையே  திருமணம்  செய்து கொண்டனர். ஆனால்  சந்திரன்  ரோகிணியிடம்  மட்டும்  அன்பாக  இருந்தான். பிறரைப் பற்றிக் கவலை கொள்ள வில்லை. இதை தங்கள் தந்தையான  தட்சனிடம்  கூறினர். தட்சன்  கோபம்  கொண்டு  சந்திரனுக்குச்  சாபம்  தந்தான். இதனால்  சந்திரனின் அழகு  நாளுக்கு  நாள்  குறைந்து கொண்டே  சென்றது. இச் சாபத்தைப் போக்க சேமேஸ்வரத்திற்குச்  சென்று  சிவ பூஜை செய்தான். சந்திரனுக்கு  வாழ்வு தர தன் சடையில்  வைத்துக் கொண்டார். இப் புராணக்கதையைப்  பிரதிபலிப்பதாகக்  கலித்தொகையில் சில குறிப்புகள்  புலவர்களால்  எடுத்தாளப்பட்டுள்ளன.
          நெய்தற்கலியில் நீர்மலிக் கரகத்தை உடையவன், பிறங்கு நீர் சடைக்கரத்தான், உருவ ஏற்று ஊர்தியான், புதுத்திங்கட் கண்ணியான், ஆதிரையான் என்று நல்லந்துவனார் சிவபெருமானின் தோற்றத்தைப் புகழ்கின்றார்.
        தாழைகளின்  மேல்  பறவைகள்  தங்கும்  காட்சியை  நல்லந்துவனார் கூறுகையில்,
         சீர்மிகு  சிறப்பினோன்  மரமுதல்  கைசேர்த்த
        நீர்மலி  கரகம் போல்  பழந்தூங்கு  முடத்தாழைப்
        பூ மலர்ந்தவை  போல புள் அல்கும்  துறைவ (கலித்.133:3-5) என்கின்றார். இவ்வடிகளில்  சிவபெருமானின்  கையில்  உள்ள  நீர்மலிக்கரகம்  உவமை  மூலமாகக் காட்டப்பட்டுள்ளன.
        பொருள்வயின்  பிரிந்த  தலைவனை  நினைந்து  ஆற்றாளாகிய  தலைவியைத் தோழி  ஆற்றுவித்தல்  எனும்  கருத்தில்  அமைந்த  கலித்தொகை 150 வது பாடலில்  தலைவனைப்  பிரிந்த தலைவியின்  மேனியின்  நிறத்திற்குச்  சிவபெருமானின்  உருவத் தோற்றம்  உவமையாகக்  கூறப்பட்டுள்ளது. இவற்றைப்  பின்வரும்  அடிகள் மூலம்  அறியலாம்.
          பிறங்கு நீர் சடைக்கரத்தான்  அணி அன்ன  நின் நிறம்
         பசந்து நீ  இனையையாய்  (கலித்.150:9,10)
         உருவ ஏற்று ஊர்தியான்  ஒள்அணி  நக்கன்ன நின்
         உரு இழந்து  இனையையாய்  உள்ளலும்  உள்ளுபவோ (கலித்.150:13,14)
         புதுத்திங்கட்  கண்ணியான்  பொன்பூண் ஞான்றன்ன நின்
         கதுப்பு உலறும்  கவினையாய்  காண்டலும்  காண்பவோ (கலித்.150:17,18)
       அடுத்து, சிவபெருமானை  அடையாளப்படுத்தும்  ஒரு  சொல்  ஆதிரையான் என்பது. இச்சொல்  கலித்தொகையில்  மட்டுமே  (150)  பயின்று  வந்துள்ளது. ஆதிரை நாள் சிவபெருமானுக்கு  உரியது  என்பதால்  ஆதிரையான் என்று சிவபெருமான்  போற்றப்படுகின்றார். ஆதிரை  நாளன்றுதான்  சிவபெருமான்  பதஞ்சலி முனிவர்க்கும்  வியாக்கிரபாத முனிவர்க்கும் தேவர்களுக்கும்  காட்சி தந்தார். அந்நாளையே ஆருத்ரா தரிசனம்  என்கின்றோம்.
           ஆதிரையான் என்ற  சொல்லாட்சியைக்  கலித்தொகையில்,
                அரும்பெறல்  ஆதிரையான்  அணிபெற  மலர்ந்த
              பெருந்தண்  சண்பகம்  போல
              பொய்யார்  ஆகுதல்  தெளிந்தனம்  (கலித்.150:20-22) என்று வரக் காண்கின்றோம். இவ்வடிகளில்  கூட  ஆதிரையானுக்காக  மலர்ந்த  செண்பக   மலரைப் போல  என்று  உவமை  மூலமாகவே   சிவபெருமான்  கூறப்பட்டுள்ளார்.
இக்கட்டுரையின் நிறைவாக,
          சிவபெருமானின் தோற்றப் பொலிவு பற்றிய பதிவுகள் முழுமையாகக்  கலித்தொகையில்  கூறப்படவில்லை யெனினும்  சிவபெருமானின்  தோற்றம்  இவ்வாறுதான் இருக்கும்  என்பதை  மட்டுமே  கண்முன்  காட்சிப்  படுத்தப்பட்டுள்ளது. மணிமிடற்றன், உழுவைத் தோல் போர்த்தியவன், கொன்றைத்தார்  அணிந்தவன், தேறு நீர் சடை கரத்தவன,; முக்கண்ணான், கணிச்சியோன், திரிபுரம் எரித்தவன் (முகம்), தாழ்சடையன், ஏற்றூர்தியான், திங்கட் கண்ணியான், அருந்தவ முதல்வன், ஆலமர் செல்வன் முதலிய  தொடர்கள்  எல்லாம் சிவபெருமானை  அடையாளம்  காணும்  தொடர்களாகவே  உள்ளன.
          தொல்காப்பியர்  கூறிய  கந்தழி  என்பதைச்  சிவபெருமானாக  அல்லது  பரம்பொருளாகக்  கண்டுள்ளனர்  உரையாசிரியர்கள்.
          சிவபெருமான்  எந்த  நிலத்திற்கும்  உரிய  கடவுள்  இல்லை. ஏனெனில், கலித்தொகையில்  உள்ள ஐந்திணைகளிலுமே  சிவபெருமானை  அடையாளம் காணும்  தொடர்கள்  உவமை  மூலமாகப்  புலவர்களால்  கையாளப்பட்டுள்ளன. உவமை  என்பது  உயர்ந்த  பொருளாக  இருக்க வேண்டும்  என்ற  தொல்காப்பியர்  கருத்து  இவண்  பொருந்துவதாக   உள்ளது.
          இக்கட்டுரையில்  சிவபெருமானின்  தோற்றமாகப்  பார்க்கும் போது  அமர்ந்த  நிலையிலும்  ஆடும்  நிலையிலுமே  புலவர்களால்  பதிவு செய்யப்பட்டுள்ளன. அமர்ந்த நிலையில்  உள்ள  உருவத்தை  ஆலமர்  செல்வனாகக்  கருத  இடமுண்டு. கொடு கொட்டியாடுதல், பண்டரங்கமாடுதல், கையில் காபாலம் கொண்டாடுதல் ஆகிய மூன்று  ஆடல்கள்  சிவபெருமானுக்கு  உரியவையாக  நல்லந்துவனரால் (கலித்.1)இந்நூலின்  கடவுள்  வாழ்த்தில்  பாடப்பட்டுள்ளன.
          சமஸ்கிருதத்தில் சிவபெருமானின் பெயர்களாக 48 பெயர்களைச் சமஸ்கிருத சொற்பொருள் அகராதி கூறுகின்றது  என்று  டாக்டர்  ராதா  வல்லாப்  தமது, ளiஎய  in  ளுயளெமசவை    டவைநசயவரசந   என்ற   கட்டுரையில்  குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் பசுபதி, ஈசா, சிவா, மகேஸ்வரா, ஈஸ்வரா,சங்கரா, சர்வா, மகாதேவா, சந்திர சேகரா, திரிலோகனா, சம்காரா, த்ரையம்பிகா, த்ரிபுராந்தகா, கங்கோத்ரா ,ருத்ரா போன்ற பெயர்களைச் சுட்டிக் கூறலாம். அர்த்த நாரீஸ்வரா, யோகேஸ்வரா, தட்சிணாமூர்த்தி, சிவா-சக்தி போன்ற பெயர்களையும் சமஸ்கிருதத்தில் காண்கின்றோம். இப் பெயர்களுள்  சந்திர சேகரா,  த்ரிபுராந்தகா, கங்கோத்ரா, யோகேஸ்வரா, தட்சிணாமூர்த்தி, சிவா-சக்தி  ஆகிய  பெயர்கள்  மட்டுமே  கலித்தொகையில்  உள்ள  சிவபெருமான்  குறித்த  பதிவுகளோடு  பொருத்திப்  பார்க்கக்  கூடியவைகளாக  உள்ளன.
          திராவிட  இந்தியாவில்  ஆரியர்களின்  வருகைக்கு  முன்பிருந்தே  வாய்மொழியாக   பல புராணக்கதைகள்   வழக்கில்  இருந்துள்ளதைக்  கலித்தொகையில் உள்ள  பதிவுகள்  நமக்கு  வெள்ளிடை மலையாக  உணர்த்தி  நிற்கின்றன.
          கலித்தொகையில்  உள்ள  சிவபெருமானின்  தோற்றப்  பொலிவு   பற்றிய  பதிவுகள்  பின்னாளில்  தோன்றிய  பக்தி  இயக்கத்திற்கு  அதாவது, சைவ  சமய  எழுச்சித் தோன்றுவதற்குக்  காரணமாக  அமைந்தது  எனில்  அது  மிகையன்று.
                         

 







          
     

       




தொல்காப்பிய ஆய்வின் வளர்ச்சியும் வரலாறும்

தொல்காப்பிய ஆய்வின் வளர்ச்சியும் வரலாறும்       

    தமிழ்மொழியின் பெருமையையும் உயர்வையும் தமிழில் தோன்றிய நூல்கள் பறைசாற்றுகின்றன. அந்நூல்கள் அனைத்திலும் தலைசிறந்த, தொன்மையான நூலாகத் திகழ்வது தொல்காப்பியம் ஆகும். இது இலக்கண நூலாக மட்டுமின்றி இலக்கிய நூலாகவும் திகழ்கின்றது. இந்நூலைப் பற்றி வரலாற்றைத் தமிழில் எழுதப்பட்டுள்ள இலக்கிய வரலாறு தொடர்பான நூல்களில் கண்டுகொள்ளலாம். இக்கட்டுரை தொல்காப்பிய ஆய்வின் வளர்ச்சியையும் வரலாற்றையும் எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டது.
    ஆய்வாளருக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தொல்காப்பிய ஆய்வின் வளர்ச்சியையும் வரலாற்றையும் 5 ஆகப் பகுத்துக் காணலாம்.
1.    தொல்காப்பியப் பதிப்புகள்
2.    தொல்காப்பிய ஆய்வடங்கல்
3.    தொல்காப்பிய உரைகள் பற்றிய ஆய்வுகள்
4.    தொல்காப்பியமும் கருத்தரங்குகளும்
5.    தொல்காப்பியமும் ஆய்வுகளும்
தொல்காப்பியப் பதிப்புகள்
    க.த.திருநாவுக்கரசு (1972) என்பவர் தொல்காப்பிய நூலடைவு ஒன்றைத் தமிழாய்வு தொகுதி - 1 இல் வெளியிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து மு.சண்முகம் பிள்ளை (1978) தொல்காப்பியப் பதிப்புகள் என்ற தலைப்பில் தமிழாய்வு தொகுதி - 8 இல் 70 பக்கங்களுக்கு வெளியிட்டுள்ளார். க.ப.அறவாணன் (1975) இல் தொல்காப்பியக் களஞ்சியம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கோ.கிருட்டிணமூர்த்தி (1990) என்பவர் தொல்காப்பிய ஆய்வின் வரலாறு என்ற நூலில் 59 பக்கங்களுக்குத் தொல்காப்பியப் பதிப்புகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1992 இல் ச.வே.சுப்பிரமணியன் தொல்காப்பியப் பதிப்புகள் என்ற தலைப்பில் நூல் ஒன்றை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். 2008 இல் பா.மதுகேஸ்வரன் என்பவர் தொல்காப்பியப் பதிப்பு வரலாறு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம் (2014) என்ற நூலில் இரா.வெங்கடேசன் தொல்காப்பியப் பதிப்புகள் நாற்பத்து நான்கினைக் குறிப்பிட்டுள்ளார். 1847 இல் அச்சுருவாக்கம் பெற்ற தொல்காப்பியம் மழைவை மகாலிங்கையரால் முதன்முதலில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையோடு முதல் பதிப்பாக வெளிவந்தது. இதைத் தொடர்ந்து 1858 இல் தொல்காப்பிய நன்னூல் எனும் ஒப்பீட்டு நூல் இ.சாமுவேல் பிள்ளையால் வெளியிடப்பட்டது.  இந்நூல் வெளிவந்து 10 ஆண்டுகள் கழித்து 1868 இல் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரால் தொல்காப்பிய எழுத்ததிகாரம் பதிப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1885 இல் சி.வை.தாமோதரம்பிள்ளை தொல்காப்பியம் பொருளதிகாரத்தை நச்சினார்க்கினியரின் உரையோடு பதிப்பித்தார். 1905 இல் வா.கோபாலசாமி ரகுநாத ராஜாளி தொல்காப்பியப் பாயிர விருத்தியை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து ரா.இராகவையங்கார், நமச்சிவாய முதலியார், சிதம்பர புன்னைவனநாத முதலியார், கா.சுப்பிரமணிய பிள்ளை, ச.கந்தசாமியார், தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியார், எஸ்.கனகசபாபதி பிள்ளை, வே.துரைசாமி ஐயர், சி.கணேசையர், தி.சு.பாலசுந்தரம் பிள்ளை, மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, ச.சோமசுந்தரபாரதியார், வே.வேங்கடராஜூலு ரெட்டியார், கா.ர.கோவிந்தராச முதலியார், க.வெள்ளைவாரணர்,வ.ஐ.சுப்பிரமணியம், கு.சுந்தரமூர்த்தி, இராம.கோவிந்தசாமி பிள்ளை, புலவர் குழந்தை, அடிகளாசிரியர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலானோர் தொல்காப்பியத்தை முழுமையாகவும் பகுதியாகவும் பதிப்பித்துள்ளனர். அவர்களின் பதிப்புகளில் இடம்பெறும் பதிப்புரைகள் சிறந்த ஆய்வுரைகளாக அமைந்துள்ளன.
தொல்காப்பிய ஆய்வடங்கல்
    துரை.பட்டாபிராமன் என்பவர் 1999 இல் இலக்கண ஆய்வடங்கல் ஒன்றைத் தயாரித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இது செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில், ஆராய்ச்சி, மொழியியல் உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1528 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதன் ஆய்வெல்லை 1985 வரை மட்டுமே. இதனைத் தொடர்ந்து மு.சங்கர் என்பவர் 2019 இல் தொல்காப்பிய ஆய்வடங்கல் ஒன்றைக் காவ்யா பதிப்பகம் வழி வெளியிட்டுள்ளார். இதன் எல்லை 2000 - 2019 வரை. இதில் 333 கட்டுரைகளும் 58 ஆய்வேடுகளும் அடைவுபடுத்தப்பட்டுள்ளன.
தொல்காப்பிய உரைகள் பற்றிய ஆய்வுகள்
    தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கும் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகள் கிடைக்கின்றன. சொல்லதிகாரத்திற்கு மட்டும் சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் உரைகளும் மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகிய இறுதி நான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரையும் கிடைக்கின்றன. தொல்காப்பிய உரைகள் பற்றிய ஆய்வுகள் ஒட்டுமொத்தமாகவும் தனித்தனியாகவும் நிகழ்த்தப்பட்டுள்ளன. சந்தானம் என்பவர் பேராசிரியரின் உரைத்திறன் பற்றி ஆராய்ந்துள்ளார். க.மகேஸ்வரி தொல்காப்பிய உரையாசிரியர்களின் வடமொழிப்புலமை (2003) என்ற தலைப்பிலும் எஸ்.ஜெயசுதா என்பவர் தொல்காப்பியச் சொல்லதிகார உரைகள் ஓர் ஒப்பாய்வு (2005) என்ற தலைப்பிலும் ச.புவனேஸ்வரி என்பவர் தொல்காப்பியம் இளம்பூரணர் உரைகளில் சொல் அகராதி (எழுத்து, சொல், பொருள்) என்ற தலைப்பிலும் (2006) தொல்காப்பிய உரைகள் வழி அறியலாகும் தமிழ்ச் சமூகம் (2008) என்ற தலைப்பிலும் ஆராய்ந்துள்ளனர். ச.குருசாமி என்பவர் இளம்பூரணர் உரைநெறியையும் (2007) நச்சினார்க்கினியர் உரைநெறியையும் (2008) வெளியிட்டுள்ளார்.  மேலும், அ.ஆறுமுகம் என்பவர் தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடர் உரையும் பெயர் அறியப்படாத உரையும் (2014) என்ற தலைப்பிலும் வே.விக்னேசு என்பவர் தொல்காப்பியச் சொல்லதிகாரப் பழையவுரைகள் - ஒப்பீடு என்ற தலைப்பிலும் தொல்காப்பியப் பொருளதிகார உரைகள் ஒப்பீடு (2017) என்ற தலைப்பிலும் கோ.சுந்தராம்பாள் என்பவர் தொல்காப்பியச் சொல்லதிகார உரைகள் - ஓர் ஒப்பியல் ஆய்வு (2017) என்ற தலைப்பிலும் ஆராய்ந்துள்ளனர்.
தொல்காப்பியமும் கருத்தரங்குகளும்
    தமிழ்மொழி செம்மொழியாக (2004) அறிவிக்கப்பட்ட பின்னர் தொல்காப்பியம் குறித்த ஆய்வுகளும் கருத்தரங்குகளும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நிகழ்த்தப்பட்டன. சென்னையில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியர் ஆய்விருக்கை தொடங்கப்பட்டு பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியுள்ளன. மேலும், புதுச்சேரி, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டு, தொல்காப்பியத்தை உலகறியச் செய்தது. பிரித்தானியாவில் தொல்காப்பியர் தமிழ் ஆய்வுக்கழகம் ஒன்று செயல்பட்டு வருவது இவண் குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பியமும் ஆய்வுகளும்
    வ.சுப.மாணிக்கனாரின் தொல்காப்பியக் கடல் (1987) என்ற நூலும் ச.அகத்தியலிங்கத்தின் தொல்காப்பிய உருவாக்கம், தொல்காப்பியக் கவிதையியல் (2016) ஆகிய நூல்களும் தொல்காப்பியரின் பாவியல் கோட்பாடு (1998) என்ற நூலும் இரா.காசிராசனின் காப்பியரின் எழுத்திலக்கணக் கோட்பாடும் சொல்லிலக்கணக் கோட்பாடும் குறிப்பிடத்தக்கவை. இரா.செகதீசனின் தொல்காப்பியப் பொருளதிகாரம் வழி அகநானூறு - ஓர் ஆய்வு என்ற நூலும் தமிழண்ணலின் தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள், தொல்காப்பிய இலக்கிய இயல் ஆகிய நூல்களும் செ.வை.சண்முகத்தின் தொல்காப்பியத் தொடரியல் என்ற நூலும்  சிலம்பு நா.செல்வராசின் தொல்காப்பியப் பாயிரம்: சமூகவியல் ஆய்வு என்ற நூலும் தொல்காப்பியத்தில் மணமுறைகள் - சமூக மானிடவியல் ஆய்வு (2010) என்ற நூலும் சுட்டிக்காட்டத்தக்கவை.
    செ.வை.சண்முகத்தின் தொல்காப்பியரின் எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு, பொருளிலக்கணக் கோட்பாடு, தொல்காப்பிய ஆய்வு ஆகிய நூல்களும் பொ.நா.கமலாவின் தொல்காப்பியர் முதல் தெரிதா வரை என்ற நூலும் கா.சிவத்தம்பியின் தொல்காப்பியமும் கவிதையும் என்ற நூலும் ஞா.ஸ்டீபனின் தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும் என்ற நூலும் துரை.சீனிச்சாமியின் தொல்காப்பியமும் இலக்கியவியலும் என்ற நூலும் இராச.கலைவாணியின் தொல்காப்பியத்தில் இசை: தொன்மையும் தொடர்ச்சியும் என்ற நூலும் தி.அமுதனின் தொல்காப்பிய உத்திகள் என்ற நூலும் ச.வே.சு.வின் தொல்காப்பியரின் இலக்கியவியல் என்ற நூலும் த.முத்தமிழின் தொல்காப்பியக் களவியலும் சங்க இலக்கியமும் என்ற நூலும் ச.சுபாஷ;சந்திரபோசின் தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள், தொல்காப்பியச் சொல்லியல் சிந்தனைகள் ஆகிய நூல்களும் சோ.இராசலட்சுமியின் தொல்காப்பியம் - சங்க இலக்கியம் உரைமேற்கோள் உரைகள் என்ற நூலும் நினைக்கத்தக்கவை.